சனி, 7 அக்டோபர், 2017

சிறகுகள்


A. P. J. Abdul Kalam
A. P. J. Abdul Kalam in 2008.jpg
https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam


சிறகுகள்
====================================ருத்ரா

புழு பூச்சிகள் கூட
நசுக்கப்படும் வரை
சிலிர்த்துக்கொண்டு தான்
இருக்கின்றன.
முடியும் வரை தன்னை
மிதிக்கும்
கால் கட்டை விரல்களை
எதிர்த்து
தன்னிடம் இருக்கும்
மிருதுவான
கொடுக்குகளையும் கொண்டு
குடைச்சல் கொடுக்கத்தான்
செய்கின்றன.
மனிதன் ஏன் இப்படி
கல் பொய்மை சாமிகளின் முன்னே
கூழாகிப்போகிறான்.
அறிவின் கூர்முனை
தன்னிடம் இருக்கும்போது
இந்த சாதி மதப்பேயாட்டங்களுக்கு
இரையாகிப்போவதேன்?
டிவி சினிமாக்களின் முன்
மரவட்டைகளாய்
மல்லாந்து கிடப்பதேன்?
சிந்தனையின் மின்னல் கீற்றுகள்
அவனுள்
இடி இடிக்கத்தளும்புகையில்
அரசியல் ஜிகினாக்களில்
அடைபட்டுக்கிடப்பதேன்?
உண்மையான அரசியலின்
மனித முகம் இழந்துபோன
ஓட்டுகள்
எனும் பாப்கார்ன்களில்
கனவுகளை கொறித்துக்கொண்டே
நனவுகளின் கசாப்புக்களில்
செதில் செதிலாய்
சிதறிக்கொண்டிருப்பதேன்?
ஓ! காகிதப்புழுக்களே!
இந்த தேர்தலின் தேர்க்காலில்
வாக்கு இறந்து
நசுங்கிப்போகுமுன்
மாமேதை அப்துல் கலாம்
உங்கள் உள்ளத்தில் ஒட்டிக்கொடுத்த
அக்கினிச்சிறகுகளை
கொஞ்சம்
அலை விரியுங்கள்.

=====================================

திங்கள், 2 அக்டோபர், 2017

"போதும் எழுந்து வா"

"போதும் எழுந்து வா"
(நடிகர் திலகம்..நினைவுக்கவிதை)
=======================================================ருத்ரா

(நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள்
தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு
அமரர் ஆகியது குறித்து எழுதிய கவிதை)



நடிப்பின் இமயமே !
இது என்ன நடிப்பு !

"மரணத்தை
இது வரை நான் காட்டியது
வெறும் அபிநயம் தான்.
இதோ
உயிர்த்துடிப்பான
ஒரு மரணத்தைப்பார்"..என
அந்த மரண தேவனுக்கு
நடித்துக்காட்ட..உன்
துடிப்பை நிறுத்தினாயா ?

"கண்ணீர் வெள்ளமாவது பெருகட்டும் "...
இந்த குடிதண்ணீர் பிரச்சினை தீர..
என்று
தலை சாய்ந்து விட்டாயா ?
தென்மேற்கு பருவக்காற்று வீசவில்லை.
வடகிழக்கும்
சென்னையின் வாசலுக்கு
இன்னும் வரவில்லை.


எல்லோரையும்
அலங்காரித்து
ஓய்ந்து போன விருதுகள்
உன்னிடம்
அலங்காரம் பெறுவதற்கு
தயங்கி தயங்கி
வந்தபோது
அவை புரிந்து கொண்டன..
திண்ணைப்பள்ளிகூடங்களையெல்லாம்
தாண்டி
ஒரு பல்கலைக்கழகத்தின்
படியேறிக்கொண்டிருக்கிறோம் என்று.


பிரம்மன் கூட
ஆச்சரியப்பட்டு போனான்.
"இந்த மனிதனை
ஒரு தடவை தானே
படைத்தேன்.
எப்படி
இவன் பல நூறு தடவைக்கும் மேல்
பிறப்பு எடுத்தான் "என்று.
ஆம்
நீ நூற்றுக்கணக்கான
படங்களில் அல்லவா
உயிர் காட்டி இருக்கிறாய்.


நடிப்பு எனும் எல்லைக்கு
எதிரி நீ.
அதனால் வானம் கூட
வெட்கப்பட்டு
உன் மடியில் விழுந்தது.
அந்த பரிமாணத்தை தேடி
எல்லைக்கு
அப்பாலும்..இந்த
'அப்பல்லோவில் '
உன் இறுதிப்படப்பிடிப்பை
வைத்துக்கொண்டாயா ?


'பாசமலரில்'
பிழிந்து காட்டினாயே
ஒரு மரணத்தை..
அப்போது ஏமாந்துபோய்
வீசிய எமனின்
பாசக்கயிறு
இப்போது மீண்டும்
எப்படிவிழுந்தது உன்னிடம் ?


இப்போதும்
அவன் ஏமாந்துதான் போனான்.
இப்போது
நீ நடித்துக்காட்டியது
ஒரு மரணத்தின்
மரணத்தை.

உனக்கு மரணம் இல்லை.
நிஜம் எது ? நிழல் எது ?

"போதும்.எழுந்து வா."

டைரக்டர் 'கட் ' சொல்லிவிட்டார்.

போதும் எழுந்து வா.

இந்த தமிழகம் இனி தாங்காது.

========================================================ருத்ரா

(ஜூலை 22 2001  "திண்ணை" இத‌ழில் ருத்ரா எழுதிய‌து)